தத்துவம்

இயன்றவரை நல்லது செய்வோம், அல்லதை இறுதிவரை தவிர்ப்போம்...

Saturday, March 31, 2012

18 "பார்வை...." கடந்து வந்த பாதைகளில்

நாம் பொழுது போகவில்லை என்று யாருடனாவது ஏதையாவது உரையாடிக் கொண்டிருக்கும் போது நம் பேச்சு நம்மையும் அறியாமல் எங்காவது இழுத்துச் சென்றுவிடும், ஒரு சிலவேளைகளில் அது நமக்கு படிப்பினையாகவும் அமைந்து விடும்.
அது போன்ற ஒரு உரையாடலின் போது ஒரு நாத்திக நண்பரிடம் இருந்து நான் முஸ்லிம் என்பதால் கேட்கப்பட்ட கேள்வி "உங்கள் இறைவன் கருணையாளனென்றால் ஏன் கண் இல்லாதவர்களைப் படைத்து இன்னல்களுக்கு ஆளாக்கினான், அப்படியென்றால் உங்கள் இறைவன் கருணையில்லாதவன் தானே?". எனக்கு வயது 19 இருக்கும், அப்பொழுது இந்தக் கேள்விக்கு சத்தியமாக விடை தெரியவில்லை. காரணம் இஸ்லாமிய அறிவு இல்லாததுதான். மேலும், இந்தக் கேள்வியைக் கேட்டு தன்னை அறிவாளியாக காட்டிக் கொண்ட அந்த நாத்திகரிடம் "இதெல்லாம் கடவுள் செயல்" என்று ஒரு ரெடிமேட் பதிலைச் சொன்னாலும் அவர் விடுவதாக இல்லை. "சரி விடுங்க" கடவுள் இருந்தா இருக்கட்டும் இல்லைன்னா போகட்டும் என்று அவர் மனம் குளிரும் விதமாக பதிலைச் சொன்னதும் என்னை தோற்கடித்து விட்டதில் அவருக்கு அப்படி ஒரு திருப்தி.

கண் இல்லாதவர்களைக் காணும் பொழுது அவர்கள் மீது, கண் இருக்கும் நமக்கு ஒருவித இரக்கம் ஏற்ப்படத்தான் செய்யும்.

கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு, இறைவன் ஏதோ அவர்களைக் கண் இல்லாதவர்களாக படைத்து விட்டான் அவன் அவர்களைப் பாதுகாப்பான் என்றும்,

நாத்திகர்களுக்கு, இயற்கையின் ஒரு சில தோல்வி முயற்ச்சிகளில் இதுவும் ஒன்று என்றும் அவர்களுக்குள்ளாகவே சமாதனமாகி விடுவதும் உண்டு.

ஆனால், நமக்குக் கண் இருப்பதாலும் அவர்களுக்கு கண் இல்லாததாலும் என்ன வித்தியாசம், அவர்களிடமிருந்து நாம் எவ்விதத்தில் வேறுபடுகிறோம்? அவர்கள் நம்மிலிருந்து எவ்விதம் வேறுபடுகின்றனர்? என்பதை என்றேனும் நாம் சிந்தித்திருக்கிறோமா?.

அப்படி சிந்திப்போமேயானால்,

"கண் இல்லாத அவர்கள்தான் நம்மைவிட எத்தனை மடங்கு பாக்கியசாலிகள்! நல்லோர்கள்!" என்ற முடிவுக்கு வர நீண்ட அவகாசம் தேவையில்லை.

ஒளிவு மறைவு இல்லாத வாழ்கை என்ற ஒன்றை நாம் கேள்விப்பட்டிருப்போம், அதை நம்மில் எத்தனை பேர் வாழ்கிறோம். கண்ணில்லாதவர்களைப் பொறுத்தவரை ஒளிவும் கிடையாது, மறைவும் கிடையாது, அதன் காரணமாகவோ என்னவோ மிகப் பெரும்பான்மையான கண்ணில்லாதவர்களின் இதயம் ஒளி உள்ள வெண்மை நிறமாக ஒளிர்கிறது.

பலகீனத்தை தங்களின் செயல்கள் மூலம் இவர்கள் தினசரி வெல்கிறார்கள்!,

நாம் வாழ்வின் நொடிப் பொழுதுகளில் எத்தனையோ காட்சிகளைக் காண்கின்றோம், ஆனால் அவை அனத்தையும் மனது என்ன தேக்கி வைத்துக் கொள்ளவா செய்கிறது?.

அப்படி ஒரு காட்சிதான் நான் எனது இரயில் பயணத்தில் நான் கண்டது, அது எனது 19ஆம் வயதில் நாத்திகரால் கேட்கப்பட்ட கேள்விக்கு விடையாக 25ஆம் வயதில்,

இரயில் "ரேஷன் கவர்", "ரிமோட் கவர்", "சீசன் டிக்கட் கவர்" etc. என்று பலவித சாமன்களை சுமந்து விற்றுக் கொண்டு வந்தார் ஒரு கண் பார்வை இல்லாதவர்.

ஒரு சிலர் சாமான்கள் வாங்கினர், நானும் சிசன் டிக்கட் கவர், பேனா என்று ஒரு சில 20 ரூபாய் மதிப்புள்ள சாமான்களை வாங்கினேன், அவரிடம் 50 ரூபாய் கொடுத்தேன் அவர் மீதம் 30 ரூபாயை, கரெக்ட்டாக ஒரு 20 ரூபாய் தாளயும் ஒரு 10 ரூபாய் தாளையும் அவ்வளவு லாவகமாக தடவி கொடுத்து, "சார் சேஞ் கரெக்ட்டா இருக்கா, பாத்துங்க சார், ரெம்ப தாங்ஸ் சார். ரிமோட் கவர், ரேஷன் கவர், பேனா" என்று கூவிக் கொண்டே, தனது வியாபரத்தை ஊன்று கோலின் உதவியுடன் தொடர்ந்தார்.

இரயிலில் பயணம் செய்வோர் இதை ஏதேனும் ஒரு சமயத்தில் கண்டிருக்கலாம்.

அவர்தான் என் கண் பார்வையில் இருந்து அகண்டாரேயொழிய, அவரின் நேர்மை என்னுள் ஒரு வித தாக்கத்தை ஏற்படுத்தியது!, காரணம் ஏமாற்றுவதற்கு அவரிடம் காரணிகள் இருந்தும் தன் விடா முயற்சியின் பலனாக ரூபாய் தாள்களை தடவி அதைக் கண்டுபிடிக்கும் ஆற்றலைக் கற்று, பொருட்களையும் விற்பனையும் செய்து பிழைக்கிறார் என்றால் அவருக்கு நம் மனதில் இடம் கொடுக்காமல் இருக்கலாமா?.

மேலும் என்னுள் இச்சம்பவம் என்னை நானே எடைபோட்டுக் கொள்ளவும் உதவியது.,
என்னிடம் ஒரு நூறு ரூபாயையோ அல்லது அதையும்விட குறைவான பணத்தையோ கொடுத்தால் என்னால் நிச்சயமாக தடவிப் பார்த்து எவ்வளவு என்று கூற இயலாது, "முயற்சியுடையோர் இகழ்ச்சி அடையார்" என்பதுதான் எத்துனை உண்மை!, அதுவும்! தனது உடலில் ஊனம் இருந்தும் தனது முயற்சியை தனது நேர்மைக்கு பறைசாற்றும் செயல்களைச் செய்யும் இவர்களிடம் இருந்து பெறும் படிப்பினைதான் என்ன??.

கிண்டி இரயில்வே ஸ்டேஷனுக்கு தினசரி வரும் கணவன் மனைவி!, கணவனுக்கு ஊன்றுகோல் துணை என்றால் மனைவிக்கு கணவனின் தோள் துணை, காதலுக்குக் கண் இல்லை என்பார்கள்! ஆனால் கண் இல்லாத காதல் கடைசிவரை நிலைக்கும் என்பதற்கு இவர்களின் மகிழ்ச்சி ஒரு ஆதாரம், அதென்னவோ தெரியவில்லை கண்பார்வையற்றவர்களின் முகத்தில் எப்பொழுதும் மகிழ்ச்சி குடிகொண்டிருக்கிறது? ஆச்சரியம்தான்!.

இவர்களைப் பார்த்து கண் இல்லாதவர்கள் என்று பரிதாபப் படுகிறோம்??!!, இறைவன் கண் இல்லாதவர்களை "இருட்டை இரசிப்பதற்க்காவா" படைத்தான் என்று இறைவன் மீது கோபம் கொள்கிறோம்?!!, பாவம் நாம்!, பரிதாபப்படுவதற்கும், கோபப்படுவதற்கும் உரிய தகுதியில் நாம் இருக்கிறோமா?,

என்றாவது எண்ணிப்பார்த்திருக்கிறோமா? சகோதர சகோதரிகளே!.

நம்மை உயிர்களிடத்தில் உயர்ந்தோராக்குவது நமது எண்ணமும் செயலுமா? அல்லது நமது உடல் உறுப்புக்களா?.


இதற்கு ஆணி அறைந்தாற் போல் வேறொரு சம்பவம்...

இரயில் பயணத்தில் பிறிதொரு சமயம் நான் கண்ட காட்சி என்னுள் வேதனையை வாரியிறைத்து விட்டுச் சென்றது வாழ்விற்கு ஒரு படிப்பினையாய்!.

ஏனெனில், இவர்களுக்கோ கண்கள் இரண்டும் நன்றாக தெரிந்திருந்தது?!.

தங்கள் இயலாமையை பூச்சூடி, பொட்டுவைத்து, அலங்கரித்து உலகிற்கு காண்பிப்போர், பலகீனத்தை வெல்லத் துணிவின்றி வாழ்வைத் தொலைத்தவர்கள், ஏனோ! தெரியவில்லை, இவர்கள் வருவதைக் கண்டாலே அனைவர் முகமும் மரண பயத்தில் வெலவெலக்கும்.

யார் இவர்கள்?

நான்கைந்து பேர்கள் கொண்ட குழுவாக வந்த இவர்கள் "திருநங்கை காசு குடு அண்ணா" என்று ஒவ்வொருவரிடமும் யாசகம் கேட்டுக் கொண்டிருந்தனர், ஒரு சிலர் ஒரு ரூபாய் ரெண்டு ரூபாய் என்று சில்லரைகள்ப் போட்டுவிட்டு தங்களுக்குள் புன்னகைத்துக் கொண்டனர், ஒரு சிலர் சில்லரை இல்லை என்று துரத்தாத குறையாக விரட்டினர், இருந்தும் ஒரு சில இளைஞர்களிடம் பிடிவாதம் பிடித்து இருந்ததை வாங்கமல் விடவில்லை.

நான் நண்பர்கள் நான்கைந்துபேருடன் பயணித்துக் கொண்டிருந்தேன், எங்கள் முறை வந்தது, எங்கள் யாரிடமும் சில்லறை இல்லை, பிடிவாதம் பிடித்துக் கொண்டு பணம் கொடுத்தால்தான் தான் இடத்தைவிட்டு நகர்வோம் என்ற மனநிலையில் அவர்கள் வேறுவிதமான தொல்லை கொடுக்க, நான் "ஏம்பா சில்லறை இல்லன்னுதான் சொல்றோம்ல" என்று கூற, "எவ்வளவுக்கு சில்லறை வேணும் நாங்க தாறோம்" என்று அவர்கள் ஒரு வித கவர்ச்சி நடையில் கூற "என்னடா இது தொல்லையா போச்சு" என்று ஒரு ஐம்பது ரூபாயைக் கொடுத்தேன், அவர் "இதோ மாத்திட்டு வந்துடுறேன்" என்று போனவர் போனவர்தான் திரும்பவில்லை. இறுதியில் நண்பர்களின் நகைப்பிற்கு நான் ஆளானேன். தொலைந்து போனது ஐம்பது ரூபாய்தான் ஆனால் அது என்னுள் பல கேள்விகளை எழுப்பிவிட தவறவில்லை.

என்னுடன் படித்த சக மாணவன் ஒருவனுக்கும், இதே போல் நடையில் ஒருவித மாற்றமும், பேச்சில் ஒருவிதமாக இழுத்துப் பேசும் நடையும் இருந்தது, அறியாத வயதில் நண்பர்கள் கேலி செய்வர், இதனால் மனம் நொந்தாலும், விளையாட்டு, ஆண்களுடன் அதிகமாக பழகுதல் போன்ற முயற்ச்சிகளினால் அந்த மாணவனுள் ஒருவித மாற்றம் வந்து அவன் ஒரு ஆணாகவே தன்னை நிலைப்படுத்திக் கொண்டான், ஓவியம் வரைவதில் எங்கள் பள்ளியிலேயே அவன் தான் ஃப(ர்)ஸ்ட்.

என்ன காரணத்திற்க்காக இவர்களுள் இந்த மாற்றம் நிகழவில்லை?, இவர்கள் பெண்களாக தங்களை உருவகப்படுத்திக் கொள்ளட்டும், ஆனால் ஏன் இவர்கள் பெண்கள் சதாரணமாக பணிபுரியும் சத்துணவுக் கூடத்திலோ, ஒரு ஏற்றுமதி துணிகள் தைக்கும் நிறுவனத்திலோ அல்லது பெண்கள் பணிபுரியத்தகுந்த தொழிற்சாலைகளிலோ பணிபுரிவதில்லை?,.

ஆக! கண்கள் இரண்டும் இல்லாதிருந்த ஒரு பார்வையற்றவரிடம் இருந்த நேர்மை!, இரண்டு கண்களும் இருந்து தங்களின் செயல்களினால் குருடாகிப் போனவர்களிடம் காணவில்லையே! இப்பொழுது யார் உயர்ந்தவர்?.

இது மட்டுமா!,

ஒரு வயிற்றில் கருவாகி உருவாகி பிறந்த, சகோதர சகோதரிகளுக்குள் ஒற்றுமை?, அற்ப சொத்திற்க்காக நீதிமன்ற வாசல் ஏறி இறங்கும் அவலம்?!.

எத்தனையோ இராஜதி இராஜாக்கள், மன்னாதி மன்னர்கள் எல்லாம் சொத்து சுகத்துடன் வாழ்ந்தனர் அவர்கள் எல்லாம் இப்போது எங்கே? யார் சிந்திப்பது?, சிந்திப்பதற்கு நேரமும் உண்டோ? இவ்வியந்திர உலகில்!.

கள்ளம், கபடம், வஞ்சம், வெட்டு, குத்து etc...

நேர்மையற்றவர்களுக்கு முன், நேர்மையின் மூலம் உயர்ந்து நிற்கும் இது போன்ற கண்பார்வையற்றவர்களைக் குறித்துத் தாழ்த்திச் சிந்திக்க நமக்கு உள்ள அருகதை என்ன? சிந்திக்க வேண்டாமா?.

இறைவன் குர்ஆனில் மனிதனைப் பற்றிக் குறிப்பிடுகையில்..

95.4.மனிதனை அழகிய வடிவில் படைத்தோம்
95.5 பின்னர் அவனை(அவன் செயல்களின் காரணமாக) இழிந்தவனிலும் இழிந்தவனாக்கினோம்.

நாம் செய்யும் செயல்கள்தான் நம் மதிப்பை இறைவனிடத்தில் உயர்த்துமேயொழிய நமது உருவ அமைப்பு கிடையாது என்பதை இவ்விறை வசனங்களின் மூலம் எளிதில் விளங்கலாம்.

40.58. குருடரும், பார்வையுள்ளவரும் சமமாக மாட்டார்கள். நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தவரும், தீமை செய்த வரும் (சமமாக மாட்டார்கள்). குறைவாகவே நீங்கள் படிப்பினை பெறுகின்றீர்கள்.

ஆதம் (அலை) அவர்களின் மார்க்கம் அனைத்திலும், இறந்ததற்குப் பின்னால் கேள்வி கணக்கு கேட்கப்படும் நாள் என்ற ஒன்று உண்டு, அன்று அனைவரும் அவர் அவர் செய்த செயல்களுக்கு பதிலளிக்க வேண்டும், இதில் வெற்றி பெறுபவர் யாரோ அவரே உண்மையான வெற்றியாளர்!.

மேலே நாம் கண்ட விஷயங்களில் இருந்து இந்தப் பரிட்சையில் எளிதில் வெற்றி பெருபவர் யாராக இருக்க முடியும்?.


அன்றைய தினம் அடுத்தவரின் (செயல்களின்) சுமைகளை வேறொருவர் சுமக்க மாட்டார்கள், மேலும், அடுத்தவர் செய்து கொண்டிருந்தது பற்றி நாம் விசாரிக்கப்படவும் மாட்டோம். எனவே இறைநம்பிக்கை கொண்டு நல்லது செய்வதில் ஒருவருக்கொருவர் முந்திக் கொள்ள வேண்டும், நன்மை செய்ய பிறரைத் தூண்ட வேண்டும் தீமைகளின் அருகில் கூடச் செல்லக்கூடாது!. என்று குர் ஆன் கட்டளை இடுகிறது.

நண்பர்களே! இறைவன் இல்லை என்பதற்கு எவ்வாறு "கண்களை" அளவுகோலாகக் கொள்வீர்கள்?.

ஒருவர் ஒரு மதத்தில் சேர்ந்துவிட்டதனாலோ, அல்லது ஒரு மதத்தில் பிறந்து விட்டதனாலோ அவர் உயர்வடைந்து விட முடியாது!.

அவர் நடக்கும் நல்வழியே அவரை உயர்ந்தவராக்கும்!.

பிறப்பால் உயர்வு தாழ்வு பாராட்டுவோருக்கும் தகுந்த படிப்பினையாக இருக்கின்றனர், இந்தக் கண்பார்வையற்றவர்கள் என்றால் மிகையாகது!.

உண்மையான இறைவனை அறிந்து கொள்ள கண்பார்வையற்றோர் நமக்கோர் வழிகாட்டி!.

Tuesday, March 13, 2012

6 "குழல் இனிது, யாழ் இனிது" ???

எங்கள் அலுவலகத்திற்கு புதிதாக ஒரு நேபாளத்தைச் சேர்ந்த அலுவலகப் (பையன்) ஆள் (40 வயதை தொட்டு விட்டவர்) சிபாரிசு மூலம் பதவியேற்று (அதாவது முன்பு Asst. Carpenter - உதவி தச்சாளர்) தனது வேலையை மூன்று மாதங்களுக்கு முன்பு தொடங்கினார். வந்த புதிதில் அவருக்கு கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டதுபோல் இருந்திருக்க வேண்டும். காரணம் சைட்டில் (Work Site) வேலை பார்ப்பதற்கும், அலுவலகத்தில் வேலை பார்ப்பதற்கும் உள்ள வித்தியாசம்தான்.

பல நாட்டினர் வேலை செய்யும் சூழலில் ஆங்கிலம் கட்டாயம் அறிந்திருத்தல் அவசியம். இவருக்கோ நேபாளி மற்றும் இந்தி மட்டுமே தெரியும்.

இவரின் அவஸ்தை, இராஜஸ்தானில் மொழி அறியாமல் விழி பிதுங்கிய என் அனுபவத்தை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியது,

வெறும் தழிழை மட்டுமே அறிந்திருந்த நான் இந்தி தெரியாமல் ஒரு ஊமையாக நின்ற பொழுது, மொழியின் அருமை எனக்கு விளங்கியது.

நான் சென்றிந்ததோ ஒரு குக் கிராமம், நமக்குத்தான் டீ குடிக்கவில்லையென்றால் மண்டையே வெடித்து விடுமே!, ரூமிலிருந்து வெளியில் இறங்கி கடைத் தெருவுக்குச் சென்றேன், எங்கு தேடினும் தேனீர் விடுதி கண்ணில் படவில்லை, யாரிடமாவது கேட்கலாம் என்றால் எப்படி கேட்பது?,

Is there any teashop nearby?. என்று ஒருவரிடம் கேட்க, என்னை ஒரு முறைப்பு முறைத்து விட்டு "ஓ! மதராஸி.., ஆங்கிரேஸி இதர் நை சல்த்தாஹே பையா, பெஹ்லே ஹிந்தி ஸீக்கோ" என்று புரியாத பாஷையில் ஏதோ சொல்ல நான் மெல்ல நடையைக் கட்டினேன், அங்கு கண்டவர்களின் தலைப்பாகை மற்றும் உடைகளை வைத்து அவர்களுக்கு ஆங்கிலம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பது தெளிவாக தெரிந்தது.

பிறகு ஒரு பெட்டிக்கடையில் சென்று சைகை மூலம் "சாய் சாய்" என்றதும் அவர் சுத்த ஹிந்தியில், அவரின் கையை அசைத்து வழிகாட்டினார், அவரின் கை அசைவுகளை வைத்து டீக்கடையை கண்டு பிடித்தேன், அங்கு சென்று சைகை மூலம் ஒன்று என்று காட்டினேன், கடைகாரர் புன்முறுவலுடன் ஒரு கட்டிங்(டீயை கட்டிங் என்றுதான் அவர்கள் அழைக்கிறார்கள்) கொடுத்தார்.
டீ குடித்தவுடன் நிம்மதி என்றாலும், பாஷை தெரியாமல் இங்கு எப்படி காலம் தள்ளுவது மனதுக்குள் ஒருவித அச்சம் படர, ஊமை பாஷையுடன் நாட்கள் மெல்ல மெல்ல நகர்ந்தது. ஆனால், வேலைக்காக சென்றிருந்த நான் பாஷை மற்றும் உணவின் காரணமாக ஒரு மாதத்திலேயே இடத்தைக் காலி செய்யவேண்டிய நிர்பந்தத்திற்க்கு ஆளானேன்.

அது முதல், பாஷை என்பது இறைவன் கொடுத்த மாபெரும் பேறு (அருட்கொடை) என்பது விளங்கியது. பல மொழி பேசக் கூடியவர்கள் வாழும் இங்கு (சவுதியில்) நான் கண்ட காட்சிகள் என் நம்பிக்கையை இன்னும் வழுப்படுத்தியது.

மூன்று வயது நிரம்பிய "பிலிப்பைன்ஸ்" தம்பதியரின் குழந்தை அதன் தாய்மொழியில் சரளமாக பேசியதைக்கண்டது,

ஆங்கிலத்தை நாக்கைச் சுழற்றி சுழற்றிப் பேசிய அமெரிக்கக் குழந்தை, அரபியைச் சரளமாகப் பேசிய அரபியைத் தாய் மொழியாகக் கொண்ட குழந்தை,

இந்தியை சரளமாக பேசிய இந்தித் தம்பதியரின் குழந்தை, தெலுங்குக் குழந்தை, மலையாளக் குழந்தை, etc.. etc.

இக்குழந்தைகளைக் காணும் பொழுது என்னுள் எழும் ஆச்சரியங்களுக்கு விடையில்லை "இவர்கள் அனைவரும் எவ்வாறு, டிக்ஷ்னரி புரட்டாமல் சரளமாக பேசுகின்றனர்?".

"குழல் இனிது யாழ் இனிது"

நிச்சயம் மூன்று வயதுக் குழந்தைகள் அவர்கள் தாய்மொழியில் சரளமாக பேசும் பொழுது குழல் யாழ் எவ்வாறு இனிக்க முடியும்.

அன்னிய மொழி பேசும் குழந்தைகளுக்கு முன் அம் மொழி அறியா யாவரும் ஊமைதான்.

இறைவனின் இருப்பை அறிந்து கொள்ள நம் முன்னே கொட்டிக்கிடக்கும் காட்சிகள் ஏராளம், அதிலும் மொழி இன்றியமையாதது.

மற்ற ஜீவராசிகளுகுக் கிடைக்காத மாபெரும் பொக்கிஷமான மொழி மனிதனுக்கு கிடைத்திருக்கிறது, மனிதனின் முன்னேற்றத்துக்கு முக்கிய காரணிகளில் மொழியும் ஒன்று.

Monday, March 5, 2012

0 எங்கே செல்கிறோம் நாம்..

ஒழுக்கம், பெரியோரை மதிக்கும் பண்பு, நன்னடத்தை இவையெல்லாம் சிறிது சிறிதாக சமூகத்தில் மறைந்து கொண்டிருக்கிறது.

பெரியோர்களின் அறிவுரை நமது இளைய சமுதாயத்திற்கு கடும் நஞ்சாகி கசக்கிறது.

நானே ராஜா நானே மந்திரி என்னும் மனப்போக்கு தற்பொழுது இளைய தலைமுறையினரை ஆட்டுவிக்கிறது!

சென்னையில் பஸ் கொஞ்சம் கூட்டமாகவும் அதில் இரண்டு மூன்று வயதுப் பெண்கள் இருந்துவிட்டால் போதும் இளைஞர்கள் ஒரு பஸ் நிறுத்தத்திலிருந்து அடுத்த பஸ் நிருத்தம் வரை ஓடிடிடிடிடி வந்து ஏறாமல் ஏற வேண்டும் என்பது இளைஞர்கள் தங்களுக்குள்ளாகவே எழுதி வைத்திக் கொண்டிருக்கும் விதி.

இதை யாரவது பெரியவர் "ஏம்பா உள்ளேதான் இவ்வளவு இடமிருக்கே, உள்ளே வாங்களேன்" கண்டித்தால் போதும்,

"யோவ் பெருசு வேலையைப் பாப்பியா? சும்மா அட்வைஸ் பண்ண வந்துட்டே" என்று மரியாதையாக் கூறுவதை காணமுடியும்.

இளம் கன்று பயம் அறியாதுதானே.

ஆனால், ஏதேனும் விபத்து நேர்ந்து கை கால் இழந்தால், பிறகு ஆயுளுக்கும் அதன் வடு போகாது என்பது பாவம் அவர்களுக்கு விளங்காத ஒன்று. அவர்கள் இம்மண்ணில் வாழும் காலமெல்லாம் அவர்கள் செய்த காரியத்தை எண்ணி அது வருந்த வைத்து விடும் என்பது மட்டும் மெய்.


9 ஆம் வகுப்பு பயிலும் மாணவன் ஒரு ஆசிரியரைக் கொலை செய்து விட்டு, ஒரு ஹிந்திப் படத்தைப் பார்த்துதான் நான் அதுபோல் செய்தேன் என்று வாக்குமூலம் கொடுத்திருக்கிறான்.

ஒழுக்கத்தைப் போதிக்கும் ஆசிரியரையே மாணவன் கொல்லத் துணிகிறான் என்றால் அவன் தன் சிந்தையை எந்த அளவுக்கு கொடூரமாக தீட்டியிருக்கிறான் என்பது தெளிவாகும். அதற்கு திரைப்படமும் துணை போயிருக்கிறது.

எந்தளவிற்கு சினிமா போன்ற ஊடகக் கலாச்சார சீரழிவுகளினால் மாணவர்களின் மனநிலை பாதிக்கப்பட்டு கொலை செய்யும் அளவிற்கு அது தூண்டியுள்ளது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்

சினிமாக்கள் பெண்களை இன்னும் போகப் பொருள் என்னும் அந்தஸ்திலேயே வைத்துள்ளது மிகவும் கவலையளிக்கும் விஷயம்.

சின்னத்திரையோ வீட்டில் உள்ள பெண்களையெல்லாம் முட்டாளாக்கி அவர்களின் மனதில் விஷ விதையை நடுகிறது.

குடும்பத்தில் எவ்வாறு சண்டையிடலாம் என்பதை, தங்களுக்கு இதை விட்டால் வேறு கதியில்லை என்று இருக்கும் பெண்களுக்கு மிக நேர்த்தியாக சின்னத்திரை மெகா.. சிரியல்கள் மூலம் கற்றுக் கொடுக்கிறது.

சண்டை அதிகரித்து பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் தள்ளும் அவலம் இனி அதிகரிக்கலாம். ஒரு காலத்தில் முதியோர் இல்லப் பற்றாக்குறை வந்தாலும் வரலாம்?

நமது பொன்னான நேரத்தை வாங்கிக் கொண்டு மிடீயாக்கள் நமக்கு எதைக் கற்றுக் கொடுக்கின்றன பார்த்தீர்களா?.


காதல், காமம், இரட்டை அர்த்த வசனங்கள், வன்முறைக் காட்சிகள் என கருத்துச் சுதந்திரப் போர்வையினூடே சமூகத்தில் சினிமா மற்றும் சின்னத்திரை மிக எளிதாக இவற்றை பந்தி வைக்கின்றன.

இதையே கண்களும் தேடித் தேடி அலைகிறது, டிவி ரிமோட் பட்டனும் தேய்கிறது. இதன் விளைவு என்னவாகும் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை.

பஸ்ஸில் பெண்களின் பகுதி ஆண்களின் பகுதி என்று வேலி போட்டுத் தடுக்க வேண்டிய காலத்தின் கோலத்தை பார்த்து நிலமையின் விபரீதத்தை விளங்கிக் கொள்ளலாம்..

பெற்றோர்களை நான் வேண்டுவது என்ன வென்றால் தயவு செய்து குழந்தைகளை டிவி சினிமா போன்ற கன்றாவிகளை பார்க்க விடாதீர்கள், நீங்களும் முடிந்தவரை இவற்றையெல்லாம் தவிர்த்து விடுங்கள்.

குழந்தைகளின் மனதில், இறைவன் நம்மை எப்போதும் கண்கானித்துக் கொண்டிருக்கிறான் என்னும் எண்ணத்தை விதையுங்கள், தாங்களும் இதுபோன்ற எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.

நல்ல விஷயங்களை குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுங்கள், இதன் மூலமே நல்ல ஒரு சமுதாயத்தை உருவாக்க முடியும்.