தத்துவம்

இயன்றவரை நல்லது செய்வோம், அல்லதை இறுதிவரை தவிர்ப்போம்...

Thursday, February 9, 2012

2 கோழிக் குஞ்சு - ஒரு பாடம்....

பள்ளிப் பருவம்..


கடை வீதி, கீச் கீச் கீச் என்று சத்தம்,
stock photo : hens on a white background

 
"கோழிக்குஞ்சு விக்கிறவன் வந்துட்டான்மா, இனி இதுக தொல்ல தாங்க முடியாது" வயதான பாட்டி ஒருவர் தெருவெங்கும் கூவிக் கொண்டிருந்தார்.


வீட்டில் நான் சேர்த்து வைத்திருந்த 5 ரூபாயை ஓடிச்சென்று எடுத்து கடைத் தெருவை நோக்கி ஓடினேன்.


வட்டக் கூடையில் கோழிக் குஞ்சுகளை வைத்து ஒரு ருபாய்க்கு ஒன்று, என்று நரை விழுந்த வயசான ஒருவர் விற்றுக் கொண்டிருந்தார், பச்சை, மஞ்சள், சிகப்பு என்று வண்ணம் தீட்டப்பட்டு அந்தக் கூடைக்குள் குஞ்சுகள் கீச்ச் கீச்ச் என்று கத்திக் கொண்டு அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிரு ந்தது என்ன ஒரு அருமையான காட்சி!.


எங்கள் ஊரில் இதை (கரென்டுக் குஞ்சு) என்றுதான் அழைப்போம்.


5 கலர்களில் குஞ்சுகளை வாங்கி  கொண்டு வீட்டிற்கு வந்து, பிறகு அவைகளுக்கு வீடு வேண்டுமே, உடனடியாக ஒரு அட்டைப் பெட்டியில் வாசல், ஜன்னல் எல்லாம் வைத்து வீடும் தாயார் செய்து,  ஒரு சிறிய பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் கொஞ்சம் புல் இட்டு, அட்டைப் பெட்டிக்குள் சிறிது மண் தூவி, அவைகளின் உணவுக்கும், உறக்கத்திற்கும் வழி செய்தவுடன் அப்படி ஒரு நிம்மதிப் பெருமூச்சு.



அப்பருவத்தில் கோழிக்குஞ்சுகளை வாங்கி வளர்ப்பதில் எனக்கும் என் நண்பர்களுக்கும் அப்படி ஒரு இன்பம்.


நாட்கள் மெல்ல நகர நகர அவையும் சிறிய அளவில் பெரிதாகிக் கொண்டிருந்தன, அதில் ஒரு குஞ்சுக்கு மட்டும் கால் ஊனம், மற்றக் குஞ்சுகள் அனைத்தும் அங்கும் இங்கும் ஓட்டி விளையாடுகையில், தெத்தி தெத்தி ஒரு குஞ்சு மட்டும் பரிதவிப்பது பார்க்கவே பாவமாக இருக்கும்.



இதன் காரணமாகவோ என்னவோ அந்தக் குஞ்சின் மீது மட்டும் வீட்டில் உள்ள அனைவருக்கும் அலாதி பிரியம், தினசரி மஞ்சளை அம்மியில் வைத்து தேய்த்து அக்குஞ்சிற்கு தடவி விடுவேன், கால் குணமாகும் என்ற நம்பிக்கையில்.


உறவினரின் திருமணத்திற்க்காக வீட்டில் உள்ள அனைவரும் வெளியூர் சென்றிருந்தனர், நானும் என் தகப்பானுரும் வீட்டில் இருந்தோம், பரிட்சைக்காக படித்து விட்டு புத்தகத்துடன் உறங்கி விட்டேன்.


தீடீரென நடு ராத்திரியில் வீட்டில் விளக்கு எரிந்தது, விளக்கு வெளிச்சம்  பட்டவுடன் நான் கண் விழித்துப் பார்த்தேன், எனது தந்தை கோழிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த பெட்டியை பார்த்துக் கொண்டிருந்தார்.


"என்ன வாப்பா?".


"பூனை கோழி குஞ்சை புடுச்சுட்டுப் போயிருச்சுடா"


அதிர்ச்சி,


"எத்தனை வாப்பா?"


"ஒரு குஞ்ச புடிச்சுருச்சுடா, நான் சத்தம் கேட்டு எழுந்திருச்சேன், அதுக்குள்ள அது கவ்விக்கிட்டுப் போயிருச்சுடா"

அந்தப் பூனை சென்ற வழியெங்கும் கோழிச் சிறகுகள் சிதறிக்கிடந்தன.


உள்ளே எட்டிப்பார்த்தேன், எனக்கு பேரதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது, ஏனெனில் பூனை கவ்விக் கொண்டு போனது, கால் ஊனமான குஞ்சை, அன்று இரவு மட்டுமல்ல நிறையை இரவுகள் அக்குஞ்சை நினைத்து உரங்காமல் சென்றதுண்டு.

அந்தக் குஞ்சு இல்லாமல் எனக்கு, வீடு எதையோ இழந்தது போல காட்சி தந்தது,

மீதமிருந்த நான்கு குஞ்சுகளும் ஒன்றன்பின் ஒன்றாக சிறிது கால இடைவெளிக்குள் இறந்து போயின.


ஏதோ ஒரு காரணத்தினால் இப்புவியில் பிறந்து விட்ட, நாம் அனைவருமே என்றாவது ஒருநாள் பிரிந்தே ஆகவேண்டும் எனும் உண்மை,   சிறு பிள்ளையாகிய எனக்கு அப்போது விளங்கவில்லை.


புகைப்பட உதவி: www.shutterstock.com